ஊரக உள்ளாட்சி தேர்தல்: 9 ஆயிரத்து 571 ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்பு
முதல் கட்ட வாக்குப்பதிவின் போது 5037 அலுவலர்களும், 2ம் கட்ட வாக்குப்பதிவின் போது 4534 அலுவலர்களும் பணியாற்ற உள்ளனர்.
HIGHLIGHTS
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கும், 122 ஊரட்சி ஒன்றிய வார்டு பதவிக்கும், 204 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், 1,731 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 6.10.2021 அன்றும், களக்காடு, நாங்குநேரி, இராதாபுரம், வள்ளியூர் ஆகிய ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 9.10.2021 அன்றும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
முதல் கட்ட தேர்தல் 621 வாக்குப்பதிவு மையங்களிலும், இரண்டாவது கட்ட தேர்தல் 567 வாக்குப்பதிவு மையங்களிலும் நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவின் போது 5037 வாக்குப்பதிவு அலுவலர்களும், 2-ம் கட்ட வாக்குப்பதிவின் போது 4534 வாக்குப்பதிவு அலுவலர்களும் என மொத்தம் 9571 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.
வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கான பணி ஒதுக்கீடு கணினி மூலம் சுழற்சி முறையில் நடைபெற்றது. பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு இன்று மாவட்டத்தில் 9 இடங்களில் நடைபெற்றது. பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்கு சீட்டு முறை உள்ளது. ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர் ஆகியோருக்கு வாக்கு சீட்டு முறை உள்ளதால் வாக்கு சீட்டு முறை பயன்படுத்துவது, தேர்தல் விதிமுறைகள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. காலை, மாலை என இரண்டு கட்டமாக நடந்த பயிற்சி வகுப்பில் காலையில் 437 ஊழியர்களும், மாலை 483 ஊழியர்களும் கலந்து கொண்டனர். இதுபோன்று அம்பாசமுத்திரம் , சேரன்மகாதேவி , களக்காடு, ராதாபுரம் உள்பட 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.