திருவாரூர் அருகே குழந்தை திருமணம் செய்ததால் மாணவி தற்கொலை முயற்சி
திருவாரூர் அருகே குழந்தை திருமணம் செய்ததால் 11ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்றார்.
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் சன்னதி தெருவை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் என்பவரின் 11ம் வகுப்பு படிக்கும் 17 வயது மகளுக்கும் விழுப்புரம் மாவட்டம் ஆண்டி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் (வயது 25 )என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டது. திருமண நாளன்று இந்தத் திருமணம் பிடிக்காமல் மணப்பெண் வீட்டை விட்டு ஓடியதால் மணப்பெண்ணின் 13 வயதான எட்டாம் வகுப்பு படிக்கும் தங்கையை திருமணம் செய்து கொடுத்தனர்.
திருமணம் முடிந்து ஒரு சில நாட்களிலேயே எட்டாம் வகுப்பு மாணவி தப்பித்து தந்தை வீட்டுக்கு வந்தார். இந்நிலையில் வேதாரண்யம் குருகுலத்தில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவி சேர்க்கப்பட்டார். அவருக்கு துணையாக மாணவியின் சித்தப்பா மகள் அதே பள்ளியில் சேர்ந்து இருவரும் தற்போது பதினோராம் வகுப்பு படித்து வரும் நிலையில் மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் இருந்து தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பதினோராம் வகுப்பு மாணவி நேற்று குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். இந்நிலையில் சிறுமி பாதி குளிர்பானத்தை குடித்து விட்டு எஞ்சிய குளிர்பானத்தை மறைத்து வைத்திருந்தார். அதில் விஷம் கலந்திருப்பது தெரியாமல் அவரது சித்தப்பாவின் மகள் எஞ்சிய குளிர்பானத்தை குடித்து விட்டார்.
இந்நிலையில் இதுகுறித்த விவரம் அறிந்த குடும்பத்தார் இருவரையும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் மாணவியிடம் வாக்குமூலம் பெற்றதன் அடிப்படையில் சிவக்குமார் மற்றும் அவரது பெற்றோர்கள் உட்பட 5 பேர் மீது குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தும், சிவகுமார் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.