மழையால் 200 ஏக்கர் சம்பா பயிர் சேதம்: திருவாரூர் விவசாயிகள் சோகம்
திருவாரூரில், நடவு செய்யப்பட்ட 200 ஏக்கர் சம்பா பயிர்கள், தண்ணீரில் மிதப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துள்ளது. இதன் காரணமாக, திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான் கிராமத்தில், நடவு செய்யப்பட்ட 200 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள், தண்ணீரில் மிதக்க தொடங்கியுள்ளன. இது குறித்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் சிலர் கூறியதாவது:
கிடாரங்கொண்டான் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா நடவு செய்யப்பட்டுள்ளது. பத்து நாட்களாக பெய்துவரும் மழையால், விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால், நடவு செய்து பத்து நாட்களே ஆன இளம் சம்பா நெற்பயிர்கள் தற்போது மிதக்க தொடங்கிவிட்டன. கூட்டுறவு சங்கங்களில், கடன் கிடைக்காமல் நகைகளை அடகு வைத்து விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
தற்போது மழையால் பயிர்கள் மூழ்கி இருப்பதால், என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறோம். பாதிப்பு குறித்து இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில், எந்த அதிகாரியும் வந்து பார்வையிடவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பயிர் பாதிப்புகளை கணக்கீடு செய்து, தமிழக அரசிடம் இருந்து உரிய நிவாரணம் பெற்று தரவேண்டும். இது போன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் வடிகால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என்று கூறினர்.