பயிர்க் கடன் மோசடி காரணமாக கூட்டுறவு சங்க தலைவர் பணியிடை நீக்கம்
திருவாரூர் அருகே பயிர்க்கடன் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு சங்கத் தலைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
திருவாரூர் அருகே தப்பலாம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 2018 -19 ஆம் ஆண்டிற்கான விவசாய பயிர்க் கடன் தொகை சட்டவிரோதமாக வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடு நடைபெற்றதாக கூறி கூட்டுறவுசங்க உறுப்பினர்கள் உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி மனு அளித்திருந்தனர். இதுதொடர்பாக திருவாரூர் மண்டல இணைப்பதிவாளர் உத்தரவின் பேரில் செயல் முறை ஆய்வு குழு விசாரணை நடத்தியது .
இதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் சங்கத்தின் தலைவர் ரவி என்பவர் தலைமையிலான நிர்வாகத்தில் முறைகேடாக பெற்ற 12 நபர்களின் பயிர் கடன் மொத்தத் தொகையான 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயில் 5 நபர்களிடமிருந்து ரூபாய் 3 லட்சத்து ஆயிரத்து 700 மட்டும் சங்க கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் வரை பயிர்க்கடன் 100 லட்சம் ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப் பட்ட நிலையில் 58 லட்சத்து பத்தாயிரம் ரூபாய்க்கு மட்டுமே சங்க உறுப்பினர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.எனவே சங்க உறுப்பினர்களின் பிரதான செயல்பாடுகளான பயிர் கடன் வழங்குவதில் நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கினை எட்டாமல் சங்க உறுப்பினர்கள் மத்தியில் நம்பிக்கை மீறல் மேலும் செய்ததாலும் சங்க நலன் கருதி சங்கத்தின் தலைவராக உள்ள ரவியை தற்காலிக பணிநீக்கம் செய்து துணைத் தலைவராக செயல்பட்டு வரும் தங்கையன் என்பவரை பொறுப்பு தலைவராக நியமனம் செய்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது அ.தி.மு.க கூட்டுறவு சங்க தலைவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.