ரத்த காயங்களுடன் பெண் மர்மச்சாவு; உறவினர்கள் திடீர் சாலை மறியல்
பட்டுக்கோட்டையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் துர்கா தேவி வயது 26. இவருக்கும் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மாளியக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் வயது 30 என்பவருக்கும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.
மாளியக்காடு கிராமத்தில் கணவர் வீட்டில் துர்க்காதேவி வசித்துவந்த நிலையில், நேற்று இரவு 10 மணி அளவில் அவரது வீட்டின் பின்புறம் ரத்த காயங்களுடன் துர்க்காதேவி இறந்து கிடந்தார்.
இதையடுத்து தகவல் அறிந்த அதிராம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று துர்க்காதேவி உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
இந்நிலையில், துர்கா தேவி அவரது கணவர் ராஜேஷ் மற்றும் அவர்களது குடும்பத்தார்களால் அடித்துக் கொல்லப்பட்டதாகக்கூறியும், அவர்களை கைது செய்ய வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்ணின் உறவினர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், குற்றவாளிகளை கைது செய்யும் வரை நாங்கள் உடலை வாங்கமாட்டோம் என தொடர்ந்து ஆவேச குரல் எழுப்பினர். இதையடுத்து பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சம்பவ இடத்திற்கு வந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த திடீர் சாலை மறியலால் இந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.