அமரர் அறையில் குளிர்சாதனம் பழுது: மருத்துவ மனையை முற்றுகையிட்ட உறவினர்கள்
பிரேதம் கெட்டுப்போனதால் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் மத்தாளம் பாறையை சார்ந்த கூலித்தொழிலாளி முத்துராஜ் . இவரது மகன் கண்ணன் (10). இவர் நேற்று மத்தாளம் பாறை அருகே உள்ள மாரநேரி குளத்தில் நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்த குற்றாலம் காவல்துறையினர் இறந்த கண்ணன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இன்று காலையில் உடலை பெற்றுக் கொள்வதற்காக கண்ணனின் உறவினர்கள் தென்காசி அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தனர். அப்போது அங்கு கண்ணனின் உடல் மிகவும் மோசமாக அழுகிய நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மாவட்ட தலைமை மருத்துவமனையில் உடலை பதப்படுத்தி பாதுகாக்க தேவையான எந்த ஒரு வசதியும் இல்லை என்று உறவினர்கள் குற்றம் சாட்டி உடல் வைத்திருந்த பிணவரையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல் துறையினர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து உறவினர்கள் உடலை பெற்றுக் கொண்டனர். இதனால் அரசு மருத்துவமனை பரபரப்பாக காணப்பட்டது.தென்காசி மாவட்டத்தில் தலைமை மருத்துவமனையாக இருக்கும் இந்த மருத்துவமனை உடலை பாதுகாக்க தேவையான குளிரூட்டப்பட்ட அறை, குளிரூட்டப்பட்ட பெட்டி போன்றவைகள் இல்லாதது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.