வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் எரிந்து சேதம்: போராடி அணைத்த தீயணைப்பு படையினர்
சங்கரன்கோவில் அருகே உயரழுத்த மின் கம்பி உரசியதில் வைக்கோல் ஏற்றி சென்ற டிராக்டர் தீப்பிடித்து எரிந்து சேதம்.
HIGHLIGHTS
சங்கரன்கோவில் அருகே உயரழுத்த மின் கம்பி உரசியதில் வைக்கோல் ஏற்றி சென்ற டிராக்டர் தீப்பிடித்து எரிந்ததை தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அழகுநேரியை சேர்ந்தவர் மந்திரிகுமார். இவர் இன்று காலை கால்நடை தீவணத்திற்காக நெடுங்குளம் சாலையில் உள்ள வயலில் வைக்கோல் வாங்கியுள்ளார். வாங்கிய வைக்கோலை மைக்கெல் என்பவரது டிராக்டர் மூலம் தனது பண்னைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தார். டிராக்டர் நெடுங்குளம் வயல்வெளியில் வந்து கொண்டிருந்த போது, மேலே சென்ற உயரழுத்த மின் கம்பியில் வைக்கோல் உரசியுள்ளது. இதில் குறுக்குசுற்று ஏற்பட்டு தீப்பொறி உருவாகியுள்ளது. இந்த தீப்பொறி வைக்கோல் மீது பட்டு தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது
உடனடியாக சங்கரன்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் உயரமான பாரங்கள் ஏற்றி வரும் போது மேல்மட்டத்தில் தார்பாலின் போட்டு வந்தால் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு குறைவு. அதனால் பொதுமக்கள் வைக்கோல் போர் ஏற்றி வரும் போது கவனமுடன் பின்பற்ற வேண்டும் என தீயணைப்பு துறையினர் சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் இந்த தீவிபத்தில் 2லட்சம் மதிப்பிலான டிராக்டரின் ட்ரைலர் குறைந்த அளவு சேதத்துடன் காப்பற்றப்பட்டது. தீயணைப்பு துறையினரின் இந்த துரித நடவடிக்கைக்கு பொதுமக்களும் விவசாயிகளும் பாராட்டு தெரிவித்தனர்.