முன்விரோதத்தால் இளைஞர் கொலை- உறவினர்கள் மறியல்
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி நகராட்சி பகுதியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது உறவினர்கள் யூனியன் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இராமநாதபுரம் நகராட்சி பகுதியை சேர்ந்த ராமு என்பவரின் மகன் தேவா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கணேசமூர்த்தி என்பவருக்கும் நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேவா தனது நண்பர் முத்துக்குமார் உடன் நடுப்பகுதியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு மோட்டார்பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது கணேசமூர்த்தி, கார்த்திக் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் மோட்டார்பைக்கில் அவர்களை பின்தொடர்ந்து சென்று உள்ளனர்.
இந்நிலையில் திடீரென தேவாவை இடைமறித்து பயங்கர ஆயுதங்களால் விரட்டியுள்ளனர். முத்துக்குமார் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் பயங்கர ஆயுதங்களால் வெட்டியதோடு தலையை தனியாக வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் தேவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து நண்பர் முத்துக்குமார் அளித்த சாட்சியின் அடிப்படையில் தேவாவின் சகோதரர் மூர்த்தி அளித்த புகாரின் பேரில் கொலைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கணேசமூர்த்தி, கார்த்திக், தினேஷ் உள்ளிட்டோரை தீவிரமாக தேடி வந்த நிலையில் கொலையாளிகள் திருப்புவனம் போலீசாரிடம் சரண் அடைந்தனர். அவர்களுக்கு முறையான தண்டனை வழங்க வேண்டும் என உச்சபள்ளி யூனியன் அலுவலகம் முன்பு அவரது உறவினர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.