மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி
இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
HIGHLIGHTS
இராமநாதபுரம் அருகே அம்மன் கோவில் கிராமத்தில் வசித்துவரும் கருப்பையா மகன் கலைசெல்வம் ஆட்டோ தொழிலாளி. மற்றுத்தியானாளியான இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆட்டோ ஒட்டி கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை பராமரித்தும், பிள்ளைகளை படிக்க வைத்தும் வருகிறார்.
இந்நிலையில் இராமநாதபுரம் பட்டினம்காத்தான் ஈசிஆர் சந்திப்பில் ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆட்டோ ஸ்டாண்டில் வரிசையாக நிறுத்தப்பட்டு ஒவ்வொருவராக ஆட்டோ பயணிகளை ஏற்றிச் செல்வார்கள். இந்நிலையில் முதலாவதாக கலைச்செல்வம் ஆட்டோவுடன் நின்றிருந்த நிலையில் ஆட்டோ சங்க தலைவர் அவரது ஆட்டோவை முதலில் நிறுத்தி சவாரியை ஏற்றியதாக கூறப்படுகிறது.
கலைச்செல்வம் நான் தான் முதல் வண்டி என கேட்டுள்ளார். அதற்கு போடா நொண்டி பயலே என்றும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆட்டோ தொழிலாளி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடமிருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை பறித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியபோது, மாற்றுத்திறளாளியான என்னை தகாத வார்த்தைகளால் பேசிய ஆட்டோ சங்க தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் எனக்கு அதே இடத்தில் ஆட்டோ ஓட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் இதுதொடர்பாக கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், போலீசார் வரச்சொல்லி என்னிடம் மட்டும் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி விட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்தார். ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை செய்ய வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.