மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியார் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு
தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் மாணவி ஒருவரிடம் செல்போனில் ஆபாசமாக பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
HIGHLIGHTS
பள்ளி மாணவிக்கு தொலைபேசியில் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரைபணி நீக்கம் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் மாணவி ஒருவரிடம் செல்போனில் ஆபாசமாக பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து சைல்டு லைன் அமைப்பு மற்றும் கல்வித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியரை பணி நீக்கம் செய்து விட்டதாக பள்ளி நிர்வாகம் கல்வித் துறையிடம் விளக்கம்
புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னர் பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது.இந்த பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக பணியாற்றுபவர் சண்முகநாதன். இவர் அதே பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரிடம் செல்போனில் ஆபாசமாக பேசினாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். மேலும் ஆசிரியர், மாணவியிடம் பேசிய ஆடியோ, சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை சைல்டு லைன் அமைப்பினர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், அந்த ஆசிரியரை பணி நீக்கம் செய்து விட்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடியோ விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருவதால், சைல்டு லைன் அமைப்பினர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆடியோவின் உண்மைத்தன்மையை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இது குறித்து பள்ளி நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் இந்த ஆசிரியர் பணிக்கு சேர்க்கப்பட்டார் என்றும் ஆடியோ குறித்து, மாணவியின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டதாகவும் விளக்கமளித்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு, அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர் தொலைபேசியில் பாலியல் தொல்லை கொடுத்து வந்த புகாரின் அடிப்படையில், அந்த ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் அந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவிகளை தங்களுடைய குழந்தை போல் நினைத்து பாடங்களை நடத்த வேண்டும். அப்படி இல்லாமல் மாணவிகளுக்கு எந்த விதத்திலாவது பாலியல் தொல்லை கொடுத்தல் அல்லது அத்துமீறும் செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.