அதிமுகவின் கோட்டையாக இருந்த கொங்கு மண்டலம் தற்போது தகர்த்தெறியப்பட்டுள்ளது
தமிழக முதல்வரின் 9 மாத சிறப்பான ஆட்சிk்கு கொங்கு மண்டல மக்களை மட்டுமல்லாது அனைத்து மாவட்ட மக்களும் தந்த பரிசு இந்த வெற்றி
HIGHLIGHTS
அதிமுகவின் கோட்டையாக இருந்த கொங்கு மண்டலம் தகர்த்தெறியபட்டுள்ளதாகவும் தமிழக முதல்வரை கொங்கு மண்டல மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்றும் முதல்வரின் 9மாத சிறப்பான ஆட்சிக்கு கொங்கு மண்டல மக்கள் மட்டுமல்ல அனைத்து மாவட்ட மக்களும் தந்த பரிசு திமுகவின் இந்த வெற்றி என்றார் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் 24 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் வெற்றி பெற்ற 24 திமுக கவுன்சிலர்கள் புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி மேலும் கூறியதாவது: திமுக சார்பில் வெற்றி பெற்ற 24 கவுன்சிலர்களும் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.தமிழக முதல்வர் யாரை கூறுகிறாரோ, அவர்கள்தான் புதுக்கோட்டை நகராட்சி தலைவராகவும் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு கிடைத்துள்ள வெற்றி. தமிழக முதல்வரின் 9 மாத சிறப்பான ஆட்சி கிடைத்த வெற்றி. இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் முதல்வராக தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார்.
இது அனைத்து மக்களுக்கும் தற்போது நன்றாக தெரிந்து விட்டது. கொங்கு மண்டலம் அதிமுக கோட்டையாக இருந்தது. அது இன்றைக்கு தகர்த்தெறியபட்டுள்ளது. கொங்கு மண்டலத்துக்கு தான் தமிழக முதல்வர் சென்றிருக்கும் போது எனக்கு வாக்களித்த மக்களுக்கும் வாக்களிக்காத மக்களுக்கும் நல்ல முதல்வராக செயல்படுவேன் என்று முதன் முதலில் கூறியிருந்தார் அதனை கொங்கு மண்டல மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர்.
தமிழக முதல்வரின் 9 மாத சிறப்பான ஆட்சி கொங்கு மண்டல மக்களை மட்டுமல்லாது அனைத்து மாவட்ட மக்களும் திமுகவிற்கு தந்த பரிசுதான் இந்த வெற்றி. கறம்பக்குடியில் அதிமுக வேட்பாளர் ஒரு வாக்கு கூட பெறாததுதான் அதிமுகவின் செல்வாக்கு. எதிர்க்கட்சி வேட்பாளர்களை திமுக வேட்பாளர்கள் மிரட்டுகின்றனர். முறைகேடு இந்த செய்து வெற்றி பெற்றுள்ளனர் என்று எடப்பாடி பழனிச்சாமி பச்சைப் பொய் கூறுகிறார்.திமுக யாரையும் மிரட்டவும் இல்லை எந்தவிதமான முறை கேட்டிலும் ஈடுபடவில்லை என்றார் அமைச்சர் ரகுபதி.