நீலகிரி மாவட்ட சிறுபான்மையினர் நலத்திட்ட உதவி பெற அழைப்பு
சிறுபான்மையின பெண்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இலவச தையல்இயந்திரம் பெற மாவட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்
HIGHLIGHTS
2021-2022-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்த மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் எந்திரம் வழங்க தமிழக அரசு ஆணை வெளியிட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவை சேர்ந்த சிறுபான்மையின பெண்களுக்கு தமிழக அரசால் இலவச தையல் எந்திரம் வழங்கப்பட உள்ளது.இதற்கான தகுதிகள் தையல் கலை பயின்றவராக இருக்க வேண்டும். அதற்கான உரிய சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.ஒரு லட்சமாக இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு 20 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.ஒரு முறை தையல் எந்திரம் பெற்றிருப்பின் மீண்டும் தையல் எந்திரம் பெற 7 ஆண்டுகள் கடந்த பின்னர் தகுதி உடையவராக கருதப்படும்.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் சிறுபான்மையின பெண்கள் உரிய ஆவணங்களுடன் உதகை பிங்கர்போஸ்ட்டில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.