நாகையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக பிரபல துணிக்கடைக்கு அபராதம்
நாகையில் ஊரடங்கு உத்தரவை மீறி வியாபாரத்தில் ஈடுபட்ட பிரபல துணிக்கடைக்கு பறக்கும் படை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்
HIGHLIGHTS
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் சில தளர்வுகளுடன் வருகிற 21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நோய் தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் நாகை மாவட்டம் இடம்பெற்று இருப்பதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்க பட்டுள்ளது.
குறிப்பாக அரசின் உத்தரவை மீரும் கடைகள் மீது பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை கடைத்தெருவில் ஊரடங்கு உத்தரவை மீறி பிரபல ஜவுளிக்கடையில் வியாபாரம் செய்யப்படுவதாக பறக்கும் படையினருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் வருவாய்துறை அதிகாரி கீர்த்தி வாசன் தலைமையில் ஷீபா, வித்யா உள்ளிட்ட போலீசார் கொண்ட பறக்கும் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி ஊழியர்களை கொண்டு ஜவுளி விற்பனை செய்து வந்ததை கண்ட அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை மீறி வியாபாரம் செய்தால், கடைக்கு பூட்டி சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து அதே பகுதியில் அனுமதி இன்றி வியாபாரம் செய்ததாக எலக்ட்ரிக்கல் கடை, பாத்திரக்கடை, சலூன் கடை உரிமையாளருக்கு தலா 1000 ரூபாய் வீதம் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், பலசரக்கு, காய்கறி கடைகளில் முகக் கவசம் அணியாமல் வியாபாரம் செய்தவர்களுக்கு 200 ரூபாய் வீதம் 6000 ரூபாய் அபராதம் விதித்து பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.