நாகையில் அதிகாலை பெய்த மழையால் வீடு இடிந்து விழுந்ததில் முதியவர் காயம்
நாகையில் அதிகாலை பெய்த மழையால் வீடு இடிந்து விழுந்ததில் முதியவர் காயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டனர்.
HIGHLIGHTS
கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து நாகை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் நாகையில் தொடர்ந்து மழை பெய்து வந்ததன் காரணமாக, நாகை சங்கரன் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீடு ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.
அப்போது வீட்டின் வெளியே பெட்டிக்கடை நடத்தி வந்த வீட்டின் உரிமையாளரான முதியவர் ஜெகநாதன் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினார். இதையடுத்து வீடு இடிந்து விழுந்து மடமடவென சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பெட்டிக் கடையின் உள்ளே இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முதியவர் ஜெகநாதனை பத்து நிமிடங்களுக்கு மேலாக போராடி மீட்டனர்.
பின்னர் அங்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் முதியவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வீடு இடிந்த விபத்தில் முதியவர் ஜெகநாதன் தலையில் பலத்த காயமும், கால் முறிவும் ஏற்பட்டுள்ளது. அவருக்கு அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனிடையே சம்பவ இடத்துக்கு வந்த தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட ஜெகநாதன் குடும்பத்தினருக்கு நிதி உதவியும் அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களும் வழங்கினார்.