காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைப்பு...!
காஞ்சிபுரம் அண்ணா பொறியியல் உறுப்புக் கல்லூரியில் மத்திய ராணுவ பாதுகாப்புடன் அறைக்கு அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி சீல் வைத்தார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காஞ்சிபுரம் அண்ணா பொறியியல் உறுப்புக்கல்லூரியில் பாதுகாப்பு அறைக்கு அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தேர்தல் பார்வையாளர் தலைமையில் தேர்தல் அலுவலர் கலைச்செல்வி சீல் வைத்தார்.இதனை தொடர்ந்து மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
18 ஆவது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நிறைவுற்ற நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 1932 வாக்கு சாவடிகளில் இருந்து பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் இருந்து நேற்று வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின் காஞ்சிபுரம் அண்ணா உறுப்புக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
காலை எட்டு மணி வரை பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அந்தந்த சட்டமன்ற தொகுதி பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆறு சட்டமன்ற தொகுதியிலிருந்து எடுத்துவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு தேர்தல் பார்வையாளர், மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி, காவல்துறை பாதுகாப்பு தேர்தல் பார்வையாளர் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறை சீல் வைக்கப்பட்டது.
சீல் வைக்கப்பட்ட அறைகள் முன்பு மத்திய துணை ராணுவ படை வீரர்கள் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட கேமராக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதும் சூழற்சி முறையில் காவல் துறையினரும் அப்பகுதியில் காவல் பணியில் ஈடுபட உள்ளனர்.