702 வீட்டுக்கு பல ஆயிரம் பேர் மனு; திருவிழா கோலத்தில் ஆட்சியர் அலுவலகம்
குடிசை மாற்று வாரியத்தின் 702 வீடுகளை பெற ஆயிரக்கணக்கானோர் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் கிராமத்தில் 200 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசு திட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டது. இதில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் செல்லும் வேகவதி ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றும் பணி தொடங்கி உள்ளது.
இங்கு குடியமர்ந்து நீண்டகாலமாக வசித்து வரும் மக்களுக்கு இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 1400 நபர்களுக்கு முறையாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் அடையாள அட்டை வழங்கப்பட்டு விரைவில் வீடுகள் வழங்கப்பட உள்ளது.
மீதமுள்ள 702 குடியிருப்புகளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீடு இல்லாதோர், நீர்நிலையில் வசிப்போர் இவர்களுக்கு அளிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து, இவர்களிடமிருந்து குடிசை மாற்று வாரிய அலுவலர்கள் மூலம் மனுக்களை பெற்று வந்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சிறப்பு முகாம் நடைபெறும் எனவும், இதற்கான மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனையடுத்து இன்று மனுக்கள் பெறப்பட்டன. குடிசை மாற்று வாரியத்தின் 702 வீடுகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் காற்றில் பறந்தன.
காவல்துறை கடைசி நேரத்தில் அனைவரையும் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டதால், வரிசையில் நின்று மனு அளித்து வந்தனர். மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் என ஒருவர் கூட முகக்கவசம் அணியா நபர்களை கண்டு அபராதம் விதிக்ககூட ஆட்கள் இல்லை.
இது போன்ற நிலை ஏற்பட்டால் மூன்றாவது அலைக்கும் முன்பே காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப் பெரிய அலை வீசும் என்பதில் ஐயமில்லை.