சமூக சமுத்துவம் கடைபிடிப்போம் என உறுதி ஏற்று பொங்கல் கொண்டாடிய மாணவர்கள்
காஞ்சிபுரம் கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரி வளாகத்தில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சாதி மத வேறுபாடுகளை களைந்து பொங்கலை கொண்டாடுவோம் என உறுதிமொழி ஏற்று, சமத்துவ பொங்கல் பண்டிகையை சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவ மாணவிகள் கொண்டாடினர்.
தமிழகத்தில் இன்னும் இரு நாட்களில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாட பொதுமக்கள் அனைவரும் ஆயத்தமாகியுள்ள நிலையில் குடும்பத்தினருக்கான புத்தாடைகள் பொங்கல் பண்டிகைக்கான பானைகள், தமிழக அரசு வழங்கிய பொங்கல் இலவச பரிசு தொகுப்பு பொருட்கள் என அனைத்தும் தயார் செய்து வைத்த நிலையில் வீடுகளை சுத்தம் செய்யும் பணிகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
வரும் தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் பண்டிகையை சமூக சமத்துவ பொங்கல் ஆகக் கொண்டாட தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைவரையும் வேண்டுகோள் விடுத்து, தமிழகத்தில் உள்ள சமத்துவப்புரங்களில் அரசு சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலை நிறுவனங்கள் தங்கள் ஊழியருடன் இணைந்து சமூக சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடி வருகின்றனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் புது பானையில் பச்சரி , வெல்லம் , நெய் முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருட்களுடன் சமத்துவ பொங்கல் பொங்கி கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமையில் சூரிய பகவானுக்கு படையலிட்டு வணங்கி மகிழ்கின்றனர்.
மேலும் மாணவ மாணவியருக்கான தனித்திறமை போட்டிகளும் நடைபெற்றது. மேலும் பாரம்பரிய கலை விளையாட்டுக்கான சிலம்பம் வாழ் வீச்சு நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய தமிழ் துறை தலைவர் சக்கரவர்த்தி , கல்லூரி வாழ்க்கையில் அனைத்து மாணவர்களும் சாதி மத பேதமின்றி நட்புடன் பழகி வரும் நிலையில் இதனை தொடரும் பொங்கல் பண்டிகையிலும் கொண்டாடும் வகையில் இன்று கல்லூரி வளாகத்தில் பொங்கல் விழா நடைபெற்றதாகவும் , இதில் வரும் போகி பண்டிகை அன்று தமிழக அரசு அறிவித்த புகையில்லா போகி எனும் வாசகத்தை முன்னிறுத்தி சுற்றுச்சூழலை காப்போம் வரும் சந்ததியினருக்கு நல்ல இயற்கை வளத்தை அளிக்கவும் உறுதி கொண்டு பண்டிகை கொண்டாட வேண்டும் எனவும், பொங்கலன்று சாதி மதம் பேதம் இன்றி நடைபெறும் பொங்கல் விழாக்கள் பங்கேற்று சகோதரத்துவத்தை வெளி காட்டுவோம் என அனைவரும் பொங்கல் விழாவில் உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி பொருளியல் துறை தலைவர் பழனிராஜ் மற்றும் துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைப்பாளர் வி. ராஜா உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.
இது போன்ற உறுதிமொழி இளைஞர் மனதில் நன்கு பதியும் நிலையில் வருங்காலம் சாதி சமய வேறுபாடு இன்றி உருவாகும் என்பதில் ஐயமில்லை.