காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் நிவாரண பொருட்கள்: எஸ்.பி வழங்கல்
வாலாஜாபாத் அருகே கிதிரிப்பேட்டை பகுதியில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு போர்வை பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
மாண்டஸ் புயல் ஏற்பட்டு அதிவேக காற்றுடன் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் அறிவித்து , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியது.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கியது குறிப்பாக நீர்நிலைகள் மற்றும் குடிசை பகுதியில் வசிக்கும் பொது மக்களை அங்கிருந்து பத்திரமாக மீட்டு பாதுகாப்பு நிவாரண முகாம்களில் தங்க வைக்க அறிவுறுத்தப்பட்டனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 65 முகாம்களில் சுமார் 2240 பேர் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் உணவுகள் கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரத்தில் 13 முகாம்களில் 126 குடும்பங்களை சேர்ந்த 494 நபர்களும், வாலாஜாபாத் வட்டத்தில் 18 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 13 குடும்பங்களை சேர்ந்த 450 பேரும் , உத்திரமேரூர் வட்டத்தில் 11 நிவாரண முகாம்களில் 115 குடும்பத்தை சேர்ந்த 334 நபர்களும் , ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் ஒன்பது நிவாரண முகாம்களில் 162 குடும்பங்களை சேர்ந்த 51 நபர்களும், குன்றத்தூர் வட்டத்தில் 14 நிவாரண முகாம்களில் 140 குடும்பத்தை சேர்ந்த 457 நபர்கள் என மொத்தம் ஐந்து வட்டங்களில் 65 மையங்களில் 2240 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் நேற்று மாலை முதல் தனது குழுவினருடன் இணைந்து சாலையோரங்களில் காற்று காரணமாக முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறின்றி நடவடிக்கைகளை காவல்துறை சார்பில் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று புயல் கரையை கடந்ததும் காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு காவல் கண்காணிப்பு அலுவலர்கள் வருகையின் போதும் உடனிருந்து பல்வேறு இடங்களில் ஆயும் மேற்கொண்டார்.
இந்நிலையில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு காவல்துறை சார்பில் நிவாரண பொருட்கள் வழங்க ஆலோசனை வழங்கினார். அவ்வகையில் வாலாஜாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிதிரிபேட்டை நிவாரண முகாமில் தங்கி உள்ள ஏழு ஆண்கள் , 9 பெண்கள், 22 குழந்தைகள் என மொத்தம் 38 பேருக்கு தேவையான பாய் , போர்வை வகைகள், குழந்தைகளுக்கு பிஸ்கட் ,பிரட் உள்ளிட்ட பொருட்களை எஸ்பி சுதாகர் வழங்கினார்.
இதேபோல் மீதமுள்ள நிவாரணம் முகாம்களில் வாலாஜாபாத் காவல்துறை சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்படும் எனவும் எஸ்.பி. சுதாகர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சி கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் , வாலாஜாபாத் காவல் நிலைய ஆய்வாளர் விநாயகம் மற்றும் வருவாய் துறையில் உடனிருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதுபோன்ற புயல் நேரங்களில் பல்வேறு முகாம்களில் தங்கி உள்ள நபர்களுக்கு காவல்துறை சார்பில் நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.