கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க கோரி போராட்டம்.
நெய்யாடுபாக்கம் ஏரியில் மணல் அள்ளி செல்லும் லாரிகளின் எண்ணிக்கை அதிகமானதால் சுற்றுச்சூழல் மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாக புகார்.
HIGHLIGHTS
வாலாஜாபாத் பாலாறு பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என கூறி அவளூர் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு செய்யாறு மற்றும் வேகவதி ஆறுகள் பாய்கின்றன. கடந்த பல வருடங்களாக வடகிழக்கு பருவ மழை மற்றும் புயல் காரணமாக இந்த மூன்று ஆற்றிலும் பல்லாயிரக்கணக்கான கன அடி நீர் சென்று கொண்டு இருந்த நிலையில் பாலங்கள் குறிப்பாக வாலாஜாபாத் மற்றும் மாகரல் பாலங்கள் மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தற்காலிக சீரமைப்புக்கு பிறகு அப்பகுதிக்கு போக்குவரத்து சகஜ நிலைமைக்கு திரும்பிய நிலையில் தற்போது , பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் ஒன்றான நெய்யாடுபாக்கம் ஏரியில் மணல் அள்ள அனுமதித்த நிலையில், பல நூற்றுக்கணக்கான கனக லாரிகள் அங்கு சென்று வருவதால் வாலாஜாபாத் பாலம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாகவும், லாரிகள் புழுதி பறக்க செல்வதால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களுக்கு உடல் நிலை பாதிப்படைவதாக கடந்த சில நாட்களாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்னும் சில தினங்களில் பள்ளிகளும் துவங்க உள்ளதால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல ஏதுவான வகையில் கனரக லாரிகள் செல்வதை தடை செய்ய வேண்டும் என கோரி இன்று அவளூர் கிராம பகுதி மக்கள் வாலாஜாபாத் பாலாற்று பாலத்தில் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அறிந்த வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து அப்பகுதி பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளிக்க அறிவுறுத்தியதன் பேரில் தற்போது அப்பகுதியில் போக்குவரத்து சீரமைந்து வருகிறது.