மீண்டும் வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பு திறப்பு விழா ரத்து
காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் முகாம் அலுவலகம் கடந்த ஓராண்டாக கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராத நிலையில் இருந்தது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டு வருவாய் கோட்டங்கள் மற்றும் ஐந்து வட்டாட்சியர் அலுவலகங்கள் உடன் செயல்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூலம் 274 கிராமங்களில் மக்கள் நல திட்டங்களை மேம்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கிராமங்களில் பணிபுரியும் பல்வேறு வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் முகாம் அலுவலகம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ஆகியவை பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு ஓராண்டாக திறக்கப்படாமல் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வந்தனர்.
மேலும் கடந்த ஓராண்டாகவே விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த இந்த கட்டிடங்கள் அப்படியே நீண்டு வந்தது. தமிழகம் முழுதும் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை தமிழக முதல்வர் காணொளி காட்சி வழியாக திறந்து வைத்து வருகின்ற வேளையில் இக்கட்டடங்களும் முதல்வர் காணொளி காட்சி வழியாக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த கட்டடங்கள் தமிழக முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்துவிட்டு திரும்பிய இன்று காலை திறக்க வாய்ப்புள்ளதாக கூறி அதற்கான பணிகளை விரைவாக பொதுப்பணி துறையினர் மற்றும் வருவாய் துறையின் மேற்கொண்டு வந்தனர்.
இக்கட்டிடங்கள் திறக்கப்பட உள்ளதாகவும், சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தமிழக முதல்வர் சென்னை வருகை சற்று தாமதமாகியதால் இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் இன்று திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் வீணாகி போயின. விழாவிற்காக போடப்பட்ட மாலை, இருக்கை மற்றும் வாழை மரங்கள் அனைத்தும் மீண்டும் அகற்றப்பட்டது.
இன்று இரவு தமிழக முதல்வர் திரும்பிய பின் நாளை திறப்பு விழா நிகழ்வுகள் அனைத்தும் அவரது அவரின் ஆலோசனைப் பேரில் உறுதி செய்யப்பட்டு அதன் பின் கட்டடங்கள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட காலமாக திறக்கப்படாத கட்டடங்கள் ஒரு வழியாக திறக்கப்படும் என ஆவலுடன் இருந்த அரசு அலுவலர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.