ஒத்துழைப்பு இல்லாததால் வெறிச்சோடி காணப்படும் வாகன நிறுத்துமிடம்
காஞ்சிபுரம் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடந்த மாதம் 22 ஆம் தேதி மேட்டு தெரு பகுதியில் வாகனம் நிறுத்துமிடத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார்
HIGHLIGHTS
காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க திறக்கப்பட்ட வாகன நிறுத்தமிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது.
கோயில் நகரம் பட்டு நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்திற்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வந்து செல்கின்றனர். மேலும் சுபமுகூர்த்த தினங்களில் காஞ்சிபுரத்தில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மிக முக்கியமாக காந்தி சாலை, காமராஜர் சாலை, விளக்கடி கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்து ஐந்து இடங்களை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மற்றும் எஸ் பி சுதாகர் தேர்வு செய்தனர்.
இதில் முதல் இடமாக மேட்டுத்தெரு பகுதியில் உள்ள ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி வாகன நிறுத்தும் இடமாக திறக்கப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அறியும் வண்ணம் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில் 20 நாட்கள் ஆகியும் இதுவரை எந்த வாகனங்களும் அங்கு பார்க்கிங் செய்ய வரவில்லை என்பதும், இதற்கு ஒத்துழைப்பு அளிக்க காந்தி சாலையில் உள்ள வியாபாரிகள் முன்வரவில்லை என்பதும் இதிலிருந்து தெரிய வருகிறது.
காந்தி சாலையில் உள்ள பட்டு விற்பனையகங்களுக்கு வரும் வாகனங்களை சாலையில் நிறுத்தக்கூடாது என உத்தரவு மற்றும் காவல் துறையின் அபராதம் விதித்தால் மட்டுமே இத்திட்டம் முறையாக செயல்படும் என்பது பொதுமக்கள் கருத்தாக உள்ளது.