காஞ்சிபுரம் கோவில் தெப்ப குளங்களில் மழை நீரை சேகரிக்க மேயர் நடவடிக்கை
காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள 13 குளங்களிலும் மழை நீரை சேகரிக்க தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
HIGHLIGHTS
கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் நகரில் நூற்றுக்கணக்கான கோயில்கள் மாநகராட்சி எல்லைக்குள் உள்ளது. இதில் புகழ்பெற்ற திருக்கோயில்களில் அருகில் தெப்பக்குளங்கள் அமைந்துள்ளது.
கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரத்தில் உள்ள பல தெப்பக்குளங்கள் மழைநீர் வழிந்து தெப்பக்குளத்திற்கு செல்லும் வகையில் வழிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்ததால் தெப்பக்குளங்கள் பலவும் வறண்டு காணப்படுவதாகவும் , வரும் பருவ மழை காலத்தில் பெய்யும் மழையை திருக்கோயில் தெப்பக்குளத்தில் சேமித்தால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நீர் ஆதாரம் பெருகும் எனவும் இதற்காக மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள திருக்குளங்களுக்கு செல்லும் நீர் வழித்தடங்களை மாநகராட்சி பொறியாளர்கள் கண்டறிய வேண்டும் என மாமன்றத்தின் சார்பில் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து நேற்று வைகுண்ட பெருமாள் கோயில் தெப்பக்குளத்திற்கு செல்லும் நீர் வழி தடம் கண்டுபிடிக்கப்பட்டு சோதனை முறையில் மாநகராட்சி லாரியிலிருந்து நீர் விடப்பட்டு ஆய்வு மேற்கொண்டதில் தங்கு தடை இன்றி நீர் சென்றதால் அப்பகுதிவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான மங்கள தீர்த்தக்குளம் அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள சங்கரமட சாலை ஏகாம்பரநாதர் திருக்கோயில் சாலை உள்ளிட்ட சாலையில் வழிந்து ஓடும் நீரை சேமிக்கும் வகையில் வழித்தடங்கள் புனரமைக்க கூறினார்.
இதே போல் உலகளந்த பெருமாள் கோயில் அருகில் உள்ள தெப்பக்குளத்திற்கு காமாட்சி அம்மன் கோயில் மாடவீதி சங்குபாணி விநாயகர் கோயில் தெரு உலகளந்தார் மாடவீதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் நீரை இத்திருக்குளத்திற்கு அனுப்பும் தடங்களை உருவாக்கவும் , ஏற்கனவே தடம் பகுதியை புனரமைக்க வைக்கவும் அறிவுரை வழங்கினார்.
இதேபோல் ரங்கசாமி குளத்திற்கு விளக்கடி கோயில் தெரு , காந்திசாலை , கோட்ராம்பாளையம் தெரு ஆகிய பகுதியில் வரும் நீரை இதில் சேமிக்கவும் ஆலோசிக்கப்பட்டது .
மேட்டுத்தெரு , கலெக்டர் ஆபீஸ் சாலையில் தேங்கும் நீரை கால்வாய் வழியாக மழைநீர் செல்லும் பாதைகள் ஆகியனவற்றை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் பொறியாளர் குழுவுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் ஆணையாளர் ஜி.கண்ணன்,பொறியாளர் கணேசன் மேயருக்கு நீர் வழித்தடங்களை காண்பித்து அதன் மூலம் பணிகளை தொடங்கலாம் என ஆலோசனை கேட்டனர். மேலும் வார்டுப்பகுதி மாமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகள் கேட்டு திறன் பட நீர் சேமிப்பை தொடங்கலாம் என தெரிவித்தார்.
இதுபோன்று காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில் தெப்பக்குளத்தில் நீர் சேமிக்கப்பட்டால் குடிநீர் ஆதாரம் பெருகி குடிநீர் பிரச்சினை இருக்காது. இந்த ஆய்வின்போது மண்டலத் தலைவர் சாந்தி சீனிவாசன்,மாநகர் மன்ற உறுப்பினர்கள் சுரேஷ் எஸ்.கே.பி. கார்த்திக் , சுப்பராயன் ஆகியோரும் உடன் இருந்தனர்.