வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் அதிகபட்சமாக மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் 78.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் 39 நாடாளுமன்ற தொகுதியிலும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் என மொத்தம் 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டம் தமிழகத்தில் நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளது. இதில் இரண்டிலுமே 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளது.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்ட சட்டமன்ற தொகுதிகளும் அடங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் உத்திரமேரூர் என இரு தொகுதிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் , திருப்போரூர், செங்கல்பட்டு, செய்யூர் என நான்கு தொகுதிகளும் அடங்கியுள்ளது.
இந்த நாடாளுமன்ற தொகுதிக்காக 1932 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் 17 லட்சத்து 48 ஆயிரத்து 866 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என மாவட்ட தேர்தல் அலுவலர் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அவ்வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் நேற்று பன்னிரண்டு லட்சத்து 53 ஆயிரத்து 2564 வாக்குகள் பதிவாகியது. இதில் ஆறு லட்சத்து 31984 ஆண் வாக்காளர்களும் ஆறு லட்சத்து 21,512 பெண் வாக்காளர்களும் 84 இதர வாக்காளர்களும் தங்கள் வாக்குகளை செலுத்தி இருந்தனர்.
வாக்குப்பதிவுகளை பொறுத்தவரையில் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி அதிகபட்சமாக 78.88 சதவீதத்தை எட்டியது. மொத்தம் 2,25,715 வாக்காளர்கள் இருந்த நிலையில், 1,77,759 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக உத்திரமேரூர் 76.9% , செய்யூர் 75.95% , திருப்போரூர் 73.82 சதவீதமும் , காஞ்சிபுரம் 69.31%, செங்கல்பட்டு 62.44 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை குறைந்தபட்ச வாக்குப்பதிவு செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் பதிவாகியுள்ளது.