அரசு நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
காஞ்சிபுரத்தில் திடீர் மழையால், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நெல் நனைந்து விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் கோடை வெப்பம் நிலவி வந்தது. கத்திரி என கூறப்படும் காலத்திற்கு முன்பாகவே கடும் வெப்பத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். எனினும், கடந்த ஆண்டு பெய்த பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் நீர்நிலைகள் அனைத்தும் முழுவதும் நிரம்பி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தங்கள் விவசாயப் பணிகளைத் தீவிரப்படுத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் விளை நிலங்களில் நெல் பயிரிடப்பட்டது. பயிரிடப்பட்ட நெல் கொள்முதல் செய்ய அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 70க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்களை திறக்க திட்டமிட்டு, தற்போது 30க்கும் மேற்பட்ட நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மதியம் ஒரு மணி அளவில் திடீரென குளிர்ந்த காற்று வீசத் தொடங்கி, மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் 15 நிமிடம் கனமழை பெய்தது. இதில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த விவசாயிகள் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நெல் ஆகியன, திடீர் மழையால் மூட்டைகள் நனைத்ததால் விவசாயிகள் சோகம் அடைந்தனர்.
நெல் கொள்முதல் செய்ய, பதிவு செய்து அதற்கான தேதி குறிப்பிட்டதை பார்க்காமல், அரசு விரைவாக விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளில் பாதுகாப்பாக மையங்கள் வைக்க, கொட்டகையை அமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.