குளத்தை காணவில்லை என விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார்
குளத்தை காணவில்லை என காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார் கூறப்பட்டது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் விவசாயிகள் தங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். மேலும் விவசாய துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு பல்வேறு விவசாய நலன் சார்ந்த அறிவுரைகளை வழங்கினர்.
இந்நிலையில் தென்னேரி அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்த யோகானந்தம் என்பவர் பேசுகையில் , விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்க்கும் போது அதற்குரிய விவசாய கடன் கிடைப்பது பெரிய சிக்கல் உள்ளதாகவும் அதனால் அது குறித்து கிராம நிர்வாக அதிகாரி உரிய நில உரிமையாளரிடம் விசாரித்த பின் அவருக்கு கடன் அளிக்க பரிந்துரை செய்ய ஆட்சியர் அறிவுரை கூற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் தமது கிராமத்தில் சிறுவயதிலிருந்தே விளையாடி வந்த கஸ்தூரி குளம் எனும் குளம் தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குளம் தூர்க்கப்பட்டது. உடனடியாக வருவாய்த்துறை அதை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பிலிருந்து மீண்டும் குளம் பயன்பாட்டிற்கு எடுத்து நீர் சேமிக்க வழி வகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
சினிமா பட பாணியில் போல் விவசாயிகள் அக்கூட்டத்தில் குளம் காணவில்லை என கூறியதால் ஆட்சியர் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.