விபத்தில் சிக்கிய தனியார் தொழிற்சாலை பேருந்து
படப்பையில் உள்ள தனியார் மதுபான ஆலை தொழிற்சாலை தொழிலாளர் பேருந்து காவண்தண்டலம் கிராமம் அருகே விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்தனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்து விபத்து ..சிறு காயங்களுடன் நல்வாய்ப்பாக பணியாளர்கள் தப்பினர்.
தொழிற்சாலை மாவட்டம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம், ஓரகடம், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிப்காட் அமைந்துள்ளது. இது மட்டுமில்லாமல் பல்வேறு கிராமங்களில் தனியார் தொழிற்சாலைகளும் அதிக அளவில் இயங்கி வருகிறது.
இதில் பணிபுரிய பெண்கள் ஆண்கள் என பல பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள் மற்றும் வேன்கள் மூலம் நாள்தோறும் அழைத்து செல்லப்படுகின்றனர். இதற்காக தொழிற்சாலை நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் தனியார் இடமும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அவ்வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் மிடாஸ் எனும் பெயரில் தனியார் மதுபான தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பணியாற்ற காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பணியாளர்கள் தொழிற்சாலை ஒப்பந்த பேருந்து மற்றும் வேன்களில் அழைத்து வரப்படுகின்றனர்.
இன்று காலை பணிக்கு 26 நபர்களுடன் சென்றபோது மாகரல் அடுத்த காவாந்தண்டலம் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் உள்ள பள்ளத்தில் சாய்ந்து விபத்து ஏற்பட்டது.
இதில் பயணித்த பத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிறு காயங்களும் ஒருவருக்கு இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து து 108 அவசர ஊர்தி மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அங்கு மருத்துவர்கள் காயத்திற்குண்டான சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து குறித்து முதல் கட்டமாக பேருந்து ஸ்டியரிங் லாக் ஆனதாகவும் அதனால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாக ஓட்டுநர் தெரிவித்துள்ளார். ஒருவர் மட்டும் இடுப்பு பகுதியில் அதிக காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர் அனைவரையும் பத்திரமாக மீட்டு பொதுமக்கள் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தார்.
விபத்து குறித்து மாகரல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிற்சாலை பணியாளர்கள் அழைத்துச் செல்லும் வாகனங்களையும் முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் இதனை தொழிற்சாலை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.