காஞ்சிபுரம் மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டி மரணம் குறித்த ஆலோசனை கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கழிவு நீர் தொட்டி மரணங்களை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடந்தது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் கேளிக்கை விடுதியில் கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்ய முயன்ற கட்சிபட்டு பகுதியை சேர்ந்த மூன்று நபர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் தொழிற்சாலை நிறுவனங்களின் பிரதிநிதிகள் உடனான கூட்டம் கடந்த வாரம் நடைபெற்று உரிய வழிகாட்டி நெறிமுறைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் மற்றும் கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோரிடமான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் , மாவட்ட தீயணைப்பு அலுவலர் நிஷா பிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி ஆகியோர் கலந்து கொண்டு கழிவுநீர் அகற்றுதல் குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும் இதில் கலந்துகொண்ட அனைவரும் இனிவரும் காலங்களில் கழிவுநீர் மரணத்தை தவிர்க்கும் வகையில் இதுகுறித்து தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
கழிவுநீர் லாரிகள் இன்னும் பழமையான முறையில் இதனை கையாண்டு வருவதாகவும் ஜெட் வகையான இன்ஜின்களை பயன்படுத்த வேண்டும் என மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சக்திவேல் கழிவுநீர் லாரி உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இறுதியாக பேசிய ஆட்சியர் ஆர்த்தி, வீடுகள் குடியிருப்பு வளாகங்கள் வணிக வளாகங்கள் திருமண மண்டபங்கள் ஹோட்டல்கள் ஆகியவற்றில் இருந்து கழிவுநீர் அகற்றுதல் எவ்வாறு என இது குறித்து விழிப்புணர்வு மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும்.
மேலும் கழிவு நீர் அகற்றும் லாரி ஒப்பந்ததாரர்கள் முறையான பயிற்சியாளர்களை கொண்டும், இப்பணியினை மேற்கொள்ள அந்தந்த மாநகராட்சி , பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட அலுவலகங்களில் முறையாக பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்யாமல் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். மேலும் கழிவு நீர்களை நீர்நிலைகளில் விடுவதாக தொடர் புகார்கள் வந்துள்ளதால் அதனை முறையான வழிகாட்டுதல் நெறி முறைகளுடன் உரிய இடத்தில் விட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
கழிவுநீர் அகற்றும் முறைகள் குறித்து பொதுமக்கள் அதிகளவில் தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் இனி வருங்காலங்களில் உயிரிழப்பை முற்றிலும் தவிர்க்க பாதுகாப்பாக இருக்க வட்டார அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்
மேலும் இனிவரும் காலங்களில் கழிவுநீர் அகற்றுதல் குறித்து கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டு அதில் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரசு ஒப்பந்த கழிவுநீர் லாரிகள் குறித்த தொலைபேசி எண்ணும் பத்திரிகை செய்தி வாயிலாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் கண்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வினோத் சாந்தாராம் , மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சக்திவேல், ஆய்வாளர் விநாயகம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.