காஞ்சிபுரம் அருகே வழிப்பறி முயற்சி வழக்கில் சென்னை போலீஸ்காரர் கைது
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே வழிப்பறி முயற்சியில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
கடந்த நான்கு நாட்களாக தமிழகமெங்கும் தமிழர் திருநாள் பண்டிகையாம் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதற்காக சென்னையில் பணிபுரிந்த பல ஊழியர்கள் தங்களது சொந்த கிராமத்திற்கு சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து மிக அதிகமாக இருந்தது.
அவ்வகையில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கீழம்பி அருகே தங்களது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த ஒரு தம்பதியினர் சாலையோரம் ஓய்விற்காக காரை நிறுத்தியுள்ளனர்.
அப்போது அங்கு சென்னை ஆவடி காவல் சரகத்திற்கு உட்பட்ட கொரட்டூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியம் வேலூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் அங்கு வந்தார்.
பொங்கல் விடுமுறைக்காக தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது சந்தேகம் கொண்டு காரின் முன்புறம் வழிமறித்து இருசக்கர வாகனத்தை நிறுத்தி காரில் இருந்த நபர்களிடம் தான் ஒரு போலீஸ் என்பதால் மிரட்டல் தொணியில் விசாரணை மேற்கொண்டு இருந்தார்.
இதனை அவ்வழியாக ரோந்து வந்த காவல் உயர் அதிகாரி ஒருவர் சாலையில் ஓரம் நடைபெற்ற இச்சம்பவத்தை கண்டு அருகில் சென்று விசாரித்துள்ளார்.
அப்போது காவலர் அவரை யாரென தெரியாமல் காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் பணிபுரிவதாக கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த அதிகாரி காவலர் பிரபாகரன் மற்றும் காரில் இருந்தவர்களை பாலு செட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டார்.
இதில் காவலர் பிரபாகரன் காஞ்சிபுரத்தில் பணிபுரிவதாக பொய்யாக கூறியதையடுத்து ஆய்வாளர் அவரை தீவிர விசாரணை நடத்தி , காரில் பயணம் செய்த நபர்களிடம் புகார் பெற்று அவர் மீது மிரட்டியது, வழிப்பறி நோக்கில் செயல்பட்டது என வழக்கு பதிந்து கைது செய்தார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த ஒரு மாதமாக ஸ்ரீபெரும்புதூர் , காஞ்சிபுரம் சுற்றுப்பகுதிகளில் காவலர் உடை அணிந்து நள்ளிரவில் பணிபுரிந்து விட்டு வீடு திரும்பும் பெண்களிடம் தவறான செய்கையில் ஈடுபடுவது, அவர்களிடமிருந்து செல்போன் பணம் நகை உள்ளிட்ட பொருட்களை வழிப்பறி செய்தல் உள்ளிட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டது அவர்களிடமிருந்து கத்தி வாக்கி டாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இச்செயல்கள் நடைபெற்று வருவதை தடுக்கும் விதமாகவே கடந்த நான்கு நாட்களாக சென்னை - திருச்சி , சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைகளில் காவல்துறை தீவிர வாகன போந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தான் காவலர் பிரபாகரன் வழிப்பறி முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சென்னையில் பணிபுரியும் காவலர் தனது எல்லைப் பகுதி இல்லாத இடத்தில் சந்தேகப்படும்படி ஏதாவது ஒரு செயலை கண்டால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டியதே தவிர தானாக கையாள்வது தவறு என காவல்துறையினர் தெரிவித்தனர்.