இரண்டாவது பசுமை விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம்
கடந்த 386 நாட்களாக இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலையம் 13 கிராமங்களில் உள்ளடக்கி உருவாக்கப்பட உள்ளது.
இதற்காக விவசாய நிலங்கள் குடியிருப்பு பகுதிகள் நீர்நிலைகள் என அனைத்தும் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 386 நாட்களாக ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் இரவு நேரங்களில் போராட்டங்கள் கிராமசபை கூட்டங்களை தவிர்த்தல் உண்ணாவிரதம் நடைபெறும் என பல்வேறு போராட்டங்களை நடத்தி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இந்தியா முழுவதும் 77வது சுதந்திர திருநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை ஒட்டி தமிழகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு ஆதரவாக எந்த செயலை மேற்கொள்ளாத அரசை கண்டித்து இன்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும், கிராம பள்ளிகளில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பதும், கிராம ஊராட்சியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது எனவும் முடிவு செய்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏகனாபுரம் கிராம பள்ளியில் மாணவ மாணவிகள் இல்லாத சுதந்திர தின விழா ஆசிரியர்களால் மட்டுமே கொண்டாடப்பட்டது.
கிராமம் முழுதும் வீதிகள் மற்றும் வீடுகளில் கருப்பு கொடிகள் கட்டி விமான நிலைய திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று இதனை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நேரடியாக கிராமத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலையில் அது தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.