திரெளபதி அம்மன் கோவில் விழாவில் பீமன் - துரியோதனன் படுகளம் பிரம்மாண்ட நிகழ்வு அரங்கேற்றம்..!
காஞ்சிபுரம் அருகே திரௌபதி அம்மன் கோவில் விழாவில் தொன்று தொட்டு நடத்தப்படும் பீமன்-துரியோதனன் படுகளம் பிரம்மாண்ட நிகழ்வை பக்தர்கள் அரங்கேற்றம் செய்தனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.இந்த ஆலயத்தில் அக்னி வசந்தவிழா வெகு விமர்சையாக கடந்த இருபது நாட்களாக நடைபெற்றது. இவ்விழாவின் ஒரு பகுதியாக நாள்தோறும் பாரதம் சொற்பொழிவு தொன்று தொட்டு நடத்தப்பட்டு வரும் நிலையில் பீமன் - துரியோதனன் படுகள உற்சவம் இன்றும் பழமை மாறாமல் அந்நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்த உற்சவத்திற்காக பிரம்மாண்டமாக துரியோதனன் 100 அடி உருவத்தை அமைத்து, கட்டைக்கூத்து கலைஞர்களால் பீமன் - துரியோதனன் போரிடும் போர்க்களக் காட்சி நடத்தப்பட்டது. இந்த காட்சியை தீமிதி விழாவிற்காக காப்பு கட்டிக்கொண்டு விரதம் இருக்கும் பக்தர்களும், தாமல் மற்றும் காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வேடிக்கை பார்த்தனர்.
இதைத்தொடர்ந்து வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு தங்களின் வேண்டுதல் காணிக்கையை செலுத்தி, திரளபதி அம்மனை பயபக்தியுடன் கும்பிட்டனர். கடந்த 13-06-2022 அன்று துவங்கிய திருவிழா மொத்தம் 23 நாட்கள் நடைபெறும் என்றும் 21 ஆம் நாள் படுகளம் மற்றும் இரவு தீ மிதி திருவிழா நடைபெறும் என்றும் 23 ஆம் தேதி திருவிழா நிறைவு பெறும் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பக்தர்கள் குறிப்பிட்டனர்.