காஞ்சிபுரம் அருகே 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ration rice seized - காஞ்சிபுரம் அடுத்த திம்ம சமுத்திரம் பகுதியில் இரண்டு லாரிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை குடிமை பொருள் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அருகே வெளி மாநிலங்களுக்கு கடத்தப்பட இருந்த பத்து டன் ரேஷன் அரிசி, இரண்டு லாரிகளை குடிமை பொருள் புலனாய்வுத்துறை பறிமுதல் செய்து வழக்கு பதிவு மற்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுறவுத் துறை சார்பில் நியாய விலை கடைகள் மூலம் இலவச அரிசி தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதனை பெற்றுக் கொள்ளும் குடும்ப அட்டைதாரர்கள் கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். இதை பெரும் தரகர்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வருவது வாடிக்கையாகவே இருந்து வருகிறது.
அவ்வப்போது இதனை ரகசிய தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு புலனாய்வு துறையினர் இதனை பறிமுதல் செய்து இது குறித்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த திம்ம சமுத்திரம் பகுதியில் வெளி மாநிலங்களுக்கு கடத்த இருப்பதாக ஆய்வாளர் சசிகலாவிற்கு வந்த தகவலை அடுத்து காஞ்சிபுரம் குடிமை பொருள் வட்டாட்சியர் இந்துமதியுடன் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட போது இரண்டு மினி லாரிகளில் அரிசி கடத்தலுக்கு தயாராக 40 கிலோ எடை கொண்ட 250 மூட்டைகளில் சுமார் 10 டன் எடை உள்ள ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தப்பி ஓடிய நபர்கள் குறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதும், நியாய விலைக் கடைகளில் பெறப்படும் அரிசிகளை விற்பனை செய்யும் நபர்கள் மீதும் அவ்வப்போது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதனை கட்டுப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.