ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உற்சவம் துவக்கம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
பஞ்சபூத ஸ்தலங்களில் மண் தலமாகவும், தேவாரம் திருவாசகம், மற்றும் 63 நாயன்மார்களால் பாடல் பெற்ற தலமாகவும், 3000 ஆண்டுகள் பழமையான கோவிலாக விளங்கும் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் ஓர் ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
கொடியேற்றத்தை ஒட்டி ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பாதாம், மனோரஞ்சிதம், மல்லிகை,தவனம் மலர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் அருகே எழுந்தருளினார்கள்.சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க கொடி கம்பத்தில் சிவலிங்கம் பொறித்து கொடி ஏற்றி வைக்கப்பட்டு பங்குனி உத்திர உற்சவம் துவக்கி வைக்கப்பட்டது. கொடியேற்ற விழாவில் ஏராளமான பொதுமக்களும் நகரின் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய விழாவான மார்ச் 23 ஆம் தேதி காலை 63 நாயன்மார்கள் உற்சவமும், இரவு வெள்ளிதேர் உற்சவமும், மார்ச் 26 ம் நாள் வெள்ளி மாவடி சேவை உற்சவமும், மார்ச் 27 ம் தேதி பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவமும் வெகு விமர்சையாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.