பணியில் இருந்த பெண் மருத்துவரிடம் காதலை கூறிய வாலிபர் கைது
கடலூர் அரசு மருத்துவமனையில் திடீரென்று ஒரு வாலிபர் பெண் டாக்டரிடம் சென்று, நான் உங்களை காதலிக்கிறேன் என கூறி தகராறில் ஈடுபட்டார்.
HIGHLIGHTS
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பெண் டாக்டர் ஒருவர் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் காலை வழக்கம் போல் நோயாளிகளை பரிசோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒரு வாலிபர் பெண் டாக்டரிடம் சென்று, நான் உங்களை காதலிக்கிறேன் என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் டாக்டர் உடனடியாக அரசு மருத்துவமனையில் உள்ள போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் கடலூர் வெள்ளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தாஸ் என்பது தெரியவந்தது. மேலும் இவர் எதற்காக அந்த பெண் மருத்துவரிடம் இது போன்ற செயலில் ஈடுபட்டார் என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் அரசு மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.