வாகன நம்பர் பிளேட்டில் கவனம்: விதிமீறல்,வாசகங்கள் இருந்தால் நடவடிக்கை -டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
நம்பர் பிளேட்டில் அரசு நிர்ணயித்த அளவு, எண்களின் நிறம், இடைவெளி இல்லாவிட்டால் , அதில் வாசகங்கள் இருந்தால் உடனடி நடவடிக்கை.
HIGHLIGHTS
சென்னையில் வாகனங்களில் மனித உரிமைகள் பெயரிலும், அரசு நிர்ணயித்த அளவைவிட மாறு பட்ட அளவிலும் நம்பர் பிளேட்களை பொருத்தியிருப்பவர்கள், தேவையற்ற வாசகங்களை எழுதியிருப்பவர்கள் மீது போக்குவரத்து காவல் துறையினர் வழக்கு செய்து வருகின்றனர்.
மனித உரிமை அமைப்புகளின் பெயரை தனியார் அமைப்புகள் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். சில தனியார் அமைப்புகள் மனித உரிமை என்ற பெயரை சேர்த்துக்கொண்டும், தங்களை மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமை அமைப்புகளோடு அடையாளப்படுத்திக் கொண்டும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
அத்துடன் நம்பர் பிளேட்களில், மிரட்டும் வகையில் பெயர்கள், வாசகங்களை எழுதியும் சுற்றி வருகின்றனர். வாகனங்களில் போலியாக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு பலரும் சுற்றிவருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதனால் போக்குவரத்து காவல் துறையினர் கடந்த 2 நாட்களாக சோதனை செய்தனர். தேவையற்ற வாசகங்களை வாகனங்களில் ஸ்டிக்கராக ஒட்டியிருக்கும் நபர்கள் மீதும், அரசு நிர்ணயித்த அளவு, எண்களின் நிறம், இடைவெளி ஆகிய விதிமுறைகளை பின்பற்றாமல் நம்பர் பிளேட்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னையில் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 1,892 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இந்த சோதனை தொடர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.