/* */

புரட்டாசி பிறந்தது சென்னையில் இறைச்சி விற்பனை 50 சதவீதம் சரிவு

சென்னையில்,புரட்டாசி மாத பிறப்பையொட்டி இறைச்சி மற்றும் மீன் விற்பனை சுமார் 50 சதவீதம் வரையில் சரிவடைந்துள்ளது.

HIGHLIGHTS

சென்னையில்,புரட்டாசி மாத பிறப்பையொட்டி இறைச்சி மற்றும் மீன் விற்பனை சுமார் 50 சதவீதம் வரையில் சரிவடைந்துள்ளது. புரட்டாசி மாத பிறப்பையொட்டி மீன், நண்டு மற்றும் கோழி இறைச்சி விலை குறைந்தாலும், ஆடு, மாட்டிறைச்சியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி பழைய விலையில் விற்பனையாகிறது. தமிழகத்தில், பெரும்பாலான இந்துக்கள், புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து, சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது வழக்கம்.'இந்த மாதத்தில் அசைவ உணவுகள் சாப்பிடுவதால், உடல் சூடு மேலும் அதிகரித்து, உடல் ரீதியான பாதிப்புகளும் ஏற்படும். செரிமான சக்தி குறைந்து, வயிற்று உபாதைகள் ஏற்படும். இதனால், உடம்பில் கொழுப்பு செரிக்கப்படாமல், ரத்தத்தில் அதிகரிக்கும்' என, கருதப்படுகிறது. சென்னையில், நண்டு மற்றும் மீன் விலையும், விற்பனையும் கணிசமாக குறைந்துள்ளது. ஆடு, மாடு இறைச்சி விற்பனை பாதியாக சரிந்தாலும், விலையில் மாற்றம் இல்லை.

சென்னை மாநகராட்சியின் இறைச்சி கூடங்களில், வழக்கமாக, ஞாயிற்றுக்கிழமைகளில், 5,000 ஆடுகள், 300 மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன.தற்போது, புரட்டாசி மாதம் துவங்கியுள்ளதால், முதல் ஞாயிற்றுக்கிழமையின் போது, 2,402 ஆடுகள், 160 மாடுகள் மட்டுமே வெட்டப்பட்டன. அதன் படி, உணவுக்காக இறைச்சி வெட்டுவது, 50 சதவீதம் குறைந்துள்ளது.உடலில் நோய் எதிர்ப்பு திறன் குறையாமல் இருக்க, புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது என, சித்த மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மீன், நண்டு மற்றும் கோழி இறைச்சி விலை குறைந்தாலும், ஆடு, மாட்டிறைச்சியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி பழைய விலையில் விற்பனையாகிறது.

Updated On: 22 Sep 2021 11:56 AM GMT

Related News