செங்கல்பட்டில் இன்று முதல் கட்டுப்பாடுகளுடன் பேருந்துகள் இயக்கம்
செங்கல்பட்டில் இன்று முதல் கட்டுப்பாடுகளுடன் பேருந்துகள் இயங்கத்தொடங்கின.
HIGHLIGHTS
செங்கல்பட்டில் இன்று காலை 6 மணி முதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதை தொடர்ந்து பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டது.
தமிழகத்தில் இன்றுடன் ஏற்கனவே அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிந்த நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் வருகிற 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில் மொத்த மாவட்டங்களும் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வகை 3இல் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இ,பதிவு தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, 50 சதவீத பயணிகளுடன் இன்று காலை 6 மணி முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்படன.
நகரப் போக்குவரத்துக்கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகள் உரிய முறையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டும், அரசு விதித்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி பேருந்துகளை இயக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.. அதன் அடிப்படையில் இன்று காலை முதல் 50 சதவீத இருக்கைகளுடன் முதல்கட்டமாக தாம்பரம், மதுராந்தகம், மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்குள் 19 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அரசு விதித்துள்ள வழிகாட்டு நடைமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை கடைபிடித்து பொதுமக்கள் பயணிக்குமாறு நடத்துனரால் கேட்டுக் கொள்ளப்படுகிறது. பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.