சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 அடிக்கு மழை நீர் : டிராபிக் ஜாம்
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கன மழையால் சிங்கப்பெருமாள் கோவிலில் 2 அடிக்கு மழை நீர் உள்ளது. இதானல் டிராபிக் ஜாம் ஏற்பட்டது.
HIGHLIGHTS
சிங்கப்பெருமாள் கோயில் : சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 அடிக்கு மேல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சிங்கப்பெருமாள் கோவிலில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருவதால் அந்தப் பகுதியில் உள்ள சுமார் 9க்கும் மேற்பட்ட ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளன. இதனால் இன்று மீண்டும் மழை பெய்தால் ஏரியில் இருந்து நீரை வெளியேற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே அமைந்துள்ள சிங்கப்பெருமாள் கோவிலில் 2 அடி அளவிற்கு மழைநீர் ஓடுவதால் வாகன ஓட்டிகள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தெல்லிமேடு ஏரிக்கரை உடைந்ததால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தென்மேலப்பாக்கம், சிங்கப்பெருமாள் கோயில் ஏரிகளும் நிரம்பி வழிவதால் சாலையை கடந்து ஓடும் நீர்மட்டம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. எனவே இந்த சாலையை பயன்படுத்துவோர் எச்சரிக்கையோடு இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. உடனடியாக தேசிய நெடிஞ்சாலையில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.