செங்கல்பட்டில் குடியரசு தின விழா
கடந்த ஆண்டு புதிதாக செங்கல்பட்டு மாவட்டம் உதயமான நிலையில், இரண்டாவது ஆண்டு குடியரசு தினவிழா இன்று காலை கொண்டாடப்பட்டது.
குடியரசு தினத்தையொட்டி செங்கல்பட்டு அரசு ஐ.டி.ஐ. பின்புறத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் உதயமானதையடுத்து, நடைபெறும் இரண்டாவது குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றினார். பின்னர் நடைபெற்ற போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனையடுத்து வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டாக்கள், தொகுப்பு வீடுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள், வேளாண்மை துறை சார்பில் டிராக்டர் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் தோட்டக்கலை சார்பில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதில் வீரதீர செயல்புரிந்த போலீசாருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.மொழிப்போர் தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் மாவட்ட எஸ்பி, கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, ஆர்.டி.ஓ.செல்வம் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.