ஜெயங்கொண்டம் அருகே மீன் குட்டையில் தவறி விழுந்து ஆசிரியர் உயிரிழப்பு
ஜெயங்கொண்டம் அருகே வலிப்பு காரணமாக ஆசிரியர் ஒருவர் மீன் குட்டையில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஜூபிலி ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (எ) சந்துரு (வயது 39). இவர் முனியதிரையன்பட்டி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ராஜேந்திரன் கொம்மேடு கிராமத்தில் உள்ள தனது நிலத்திற்கு சென்று வருவதாகக் கூறிச்சென்றார்.
அங்கு அவருக்கு சொந்தமான மீன் குட்டையில் நின்றபோது எதிர்பாராதவிதமாக திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டதில், அவர் தடுமாறி மீன் குட்டையில் விழுந்து நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ராஜேந்திரனின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அரசு பள்ளி ஆசிரியர் மீன் குட்டையில் விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.