/* */

அரியலூர் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் மேலும் ஒரு பெண் கைது

அரியலூர் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் மேலும் ஒரு பெண்ணை போலீசார் கைது செய்து உள்ளனர்.

HIGHLIGHTS

அரியலூர் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் மேலும் ஒரு பெண் கைது
X

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாந்தா(வயது 30). இவர், 15 வயது சிறுமியை வீட்டு வேலைக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அழைத்து சென்றுள்ளார். பின்னர் சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பெற்றோரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

இதையடுத்து சிறுமியை, அவரது பெற்றோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்து சென்ற சாந்தா, அந்த சிறுமியை, கீழப்பழூவூரை சேர்ந்த சந்திரா(30) என்ற பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார். இதைத்தொடர்ந்து சந்திரா, அந்த சிறுமியை கீழப்பழுவூர், வி.கைகாட்டி, செந்துறை மற்றும் தஞ்சாவூர் பகுதிகளுக்கு அழைத்துச்சென்று, சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, சிலருடன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார் என்பதும், இதற்கு சாந்தா உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சாந்தா, சந்திரா மற்றும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தஞ்சை கீழவாசல் பாம்பாட்டி தெருவை சேர்ந்த முருகேசன் மகன் வினோத் (29), வி.கைகாட்டி முத்துவாஞ்சேரி சாலை உரக்கடை தெருவை சேர்ந்த செந்தில் மகன் பிரேம் (29), நாகமங்கலம் இந்திரா நகரைச் சேர்ந்த கருப்புசாமியின் மகன் பாலு என்ற பாலச்சந்தர் (27), செந்துறை மணப்பத்தூர் மேலத்தெருவை சேர்ந்த தங்கும் விடுதி மேலாளர் தனவேல் (58), பாலியல் தொழிலில் சந்திராவுக்கு உதவியதாக கீழப்பழுவூர் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த வெற்றிக்கண்ணன்(37), திருமானூர் தெற்கு தெருவைச் ேசர்ந்த தெய்வீகன்(49), சிறுமி பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு, தான் பராமரித்து வரும் வணிக வளாகத்தில் இடம் கொடுத்ததாக கீழப்பழுவூரை சேர்ந்த ராஜேந்திரன்(62) ஆகிய 9 பேரை கடந்த 6ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய தனியார் தங்கும் விடுதியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஒருவரையும், தங்கும் விடுதி உரிமையாளர் மற்றும் பாலாஜி என்பவரையும் என 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே அந்த சிறுமி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

சிறுமி உடல் நலிந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சிறுமியின் பெற்றோர், மிகுந்த மன வேதனையில் உள்ளனர்.

இந்நிலையில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன், துணை சூப்பிரண்டு(பயிற்சி) சங்கர் கணேஷ் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுமதி, உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் உள்ளிட்ட போலீசார் மேலும் இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய அமிர்தநாயன் கோட்டை கிராமத்தை சேர்ந்த இந்திரா என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமி மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாக சில நாட்கள் இந்திரா வீட்டில்தான் வைத்திருந்தனர் என்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்

Updated On: 9 March 2022 6:38 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்