ரேஷன் கடையில் பயோமெட்ரிக் நடைமுறை ரத்து? கொரோனா பரவலால் வலுக்கும் கோரிக்கை
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு நடைமுறையினை, தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
HIGHLIGHTS
கொரோனா நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், ரேஷன் கடைகளில் கைரேகை பதிவிட்ட பிறகு அத்தியாவசிய பொருட்களை பெறும் நடைமுறையினை, தற்காலிகமாக ரத்து செய்து துண்டு சீட்டு வழங்கும் முறையை பின்பற்ற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டம் அலை வேகமாக பரவி அச்சுறுத்தி வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. முக்கியமாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், கிருமி நாசினி உபயோகித்து கை கழுவுதல் உள்ளிட்ட பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் முன்னெடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றது.
தற்போது ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க, பயோமெட்ரிக் முறை அதாவது கைரேகையை பதிவு செய்த பிறகு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கு நடைமுறை அமலில் உள்ளது. ஒரேநேரத்தில் நாளொன்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைரேகை பதிவிட்டு பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
இதனால், கொரோனா நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், இந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த ஆண்டு வீடு வீடாக துண்டு சீட்டுகள் வழங்கி பொதுமக்கள் பாதுகாப்பாக பொருட்களை பெற்றனர். அதுபோல், பெருந்தொற்று காலமான தற்போதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
பயோமெட்ரிக் இயந்திரத்தில் சுமார் நாளொன்றுக்கு குறைந்த பட்சமாக 200 நபர்கள் வீதம் கைரேகை பதிவு செய்து வருவதினால் ஒருவர் மூலம் மற்றவர்களுக்கு நோய் தொற்று எளிதில் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே தமிழக அரசு இவ்விஷயத்தில் தாமதமின்றி நடவடிக்கை வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.