அரியலூரில் இறந்து பிறந்த பெண் குழந்தை: கைப்பையில் கொடுத்த செவிலியர்கள்
அரியலூர் அரசுமருத்துவமனையில், இறந்து பிறந்த பெண் குழந்தை உடலை, கைப்பையில் செவிலியர்கள் போட்டு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
HIGHLIGHTS
அரியலூர் அருகேயுள்ள குன்னம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர்; சென்னையில் சம்ஸா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆனநிலையில், ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை வயிற்றிலேயே உயிரிழந்தது.
தற்போது மீண்டும் கர்ப்பமடைந்த மணிமகலைக்கு, நேற்று பிரசவவலி ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இரவு சேர்க்கப்பட்ட மணிமேகலையை, ஒருமுறை மருத்துவர் பார்த்து சிகிச்சை செய்துள்ளார். அதன்பின்னர், பிரசவவலி ஏற்பட்ட மணிமேகலை, மருத்துவர்களோ, செவிலியர்களோ வந்து பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே, மணிமேகலைக்கு பெண் குழந்தை தானாக பிறந்து வெளியே வந்துள்ளது. தொப்புள்கொடியை, மணிமேகலைக்கு அருகில் இருந்த ஒரு பெண் பிரித்துள்ளார். குழந்தை, இறந்த நிலையில் தாய் மணிமேகலைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதேநேரம், ஆசை ஆசையாக பிறந்து கையில் ஏந்த வாசலில் காத்திருந்த தந்தை சேகரிடம், இறந்த குழந்தையை பையில் போட்டு செவிலியர்கள் கொடுத்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த செயல், உறவினர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இவ்வாறு அலட்சியமாக செயல்படுவதாக, உரிய முறையில் சிசுவின் உடலை தராமல் இப்படி செய்தது அதிர்ச்சி தருவதாக, பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.