அரியலூரில் நவீன வாசக்டமி விழிப்புணர்வு ரதம்: ஆட்சியர் துவக்கி வைப்பு
ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் நவீன வாசக்டமி இரு வார விழாவினை முன்னிட்டு NSV விழிப்புணர்வு ரதம்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் நவீன வாசக்டமி இரு வார விழாவினை முன்னிட்டு NSV விழிப்புணர்வு ரதத்தை மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மருத்துவம். ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக நவீன வாசக்டமி இரு வார விழாவை 21.11.2021 முதல் 04.12.2021 வரை அனுசரிக்கும் பொருட்டு. விழிப்புணர்வு ரதம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து NSV விளக்க கையேடு மற்றும் கைப்பிரதி ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டார்கள். இவ்விழிப்புணர்வு கையேட்டில் வாசக்டமி குறித்த எளிய முறை, புதிய முறை, தையல் இல்லை, தழும்பு இல்லை, வலி இன்றி செய்யப்படுகிறது.
ஒரு சில நிமிடங்களில் செய்யப்படும். இல்லற இன்பம் குறையாது. அறுவை சிகிச்சை இல்லை, 100 சதவீதம் பாதுகாப்பானது. பக்க விளைவுகள் இல்லை, மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை, கடின உழைப்புக்கு தடை இல்லை. மேலும், நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறையை ஏற்றுக் கொள்ளும் நபருக்கு ஊக்கத்தொகையாக ரூ.1,100/-ம், ஊக்குவிப்போருக்கு ரூ.200/-ம் அன்றே வழங்கப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் வாசக்டமி சிகிச்சை மேற்கொள்ள அச்சம் கொள்ள தேவையில்லை என மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்தார்.
இவ்விழாவில், துணை இயக்குநர் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் மரு.இளவரசன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) கீதாராணி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.