அரியலூர் மாவட்ட வளர்ச்சி பணிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் அடிக்கல்
அரியலூர் மாவட்டத்தில் ரூ.4.47 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டினார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தில் ரூ.4.47 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அடிக்கல் நாட்டினார்.
அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், கழுவந்தோண்டி கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தமிழ்நாடு கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கழுவந்தோண்டி-பெரியவளையம் சாலை மேம்பாட்டுத் திட்டப்பணிகளையும், நெடுஞ்சாலைத் துறை - நபார்டு மற்றும் கிராம சாலைக் கோட்டம் சார்பில் நபார்டு வங்கியின் உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின்கீழ் மணக்கரை-பிராஞ்சேரி சாலையில் ரூ.322.20 இலட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணியினையும் என மொத்தம் ரூ.4 கோடியே 47 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்து, நடைபெறும் பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவுறுத்தினார்.