பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை
பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து, அரியலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தில் தான் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து, அரியலூர் மகிளா நீதிமன்ற நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பாகல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். இவருக்கு திருமணம் ஆகி 4 மகள்கள் ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் கடந்த 2018 ஆம்ஆண்டு ஜனவரி 17ம்நாள் சவுக்கு தோப்பிற்கு ஆடு மேய்க்க சென்ற தன்னுடைய மூன்றாவது மகளை (வயது 15) சிவலிங்கம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன்பிறகு பலமுறை வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்நிலையில் அந்த சிறுமிக்கு மாதவிடாய் வராத காரணத்தால் மருத்துவரிடம் சென்று போது சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
இது குறித்து 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி சிறுமியிடம் புகார் வாங்கிய ஜெயங்கொண்டம் மகளிர் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து சிவலிங்கத்தை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கின் விசாரணை அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை சிவலிங்கத்திற்க்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து சிவலங்கத்தை போலிசார் பாதுகாப்புடன் திருச்சி மத்தியசிறைக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்.