கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெற கலெக்டர் வேண்டுகோள்
அரியலூர் மாவட்டத்தில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
அரியலூர் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட, கால்நடை வளர்ப்பினை உபதொழிலாக கொண்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் அரசுடைமை வங்கிகள் மூலம் கால்நடைகள் பராமரிப்பிற்காக கிசான் கடன் அட்டை வழங்கி கடனுதவி செய்யப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் பயன்பெறுவதற்கு ஏதுவாக, மாவட்ட அளவிலான சிறப்பு முகாம்கள் வரும் 2022, பிப்ரவரி 15-ம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது. இதற்காக அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டுவருகின்றன.
எனவே, கிசான் கடன் அட்டை மூலம் பயன்பெற ஆர்வமுள்ள கால்நடை வளர்ப்போர்கள், தங்களது ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முன்பக்க நகல், சமீபத்திய இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் தங்களிடம் உள்ள கால்நடைகள் எண்ணிக்கை விவரம் (ம) நில உடைமை அளவு ஆகிய விவரங்களுடன் விண்ணப்பிக்கவும்.
பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் ஊராட்சி ஒன்றிய அளவிலான ஒருங்கிணைப்புக் குழு மூலமாக பரிசீலிக்கப்பட்டு, கால்நடை வளர்ப்போர்களுக்கு கிசான் கடன் அட்டை வழங்க பரிந்துரைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.