கோவில் நிலங்களை விற்கும் தமிழக அரசின் முடிவிற்கு இந்து முன்னணி கண்டனம்
கோவில் நிலங்களை விற்கலாம் என்ற தமிழக அரசின் முடிவிற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற இந்து உரிமை மீட்பு பிரச்சார பயணத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில் இந்து உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் கடந்த 28ஆம் தேதி திருச்செந்தூரில் தொடங்கி 31ஆம் தேதி சென்னையில் நிறைவு பெறும். தமிழகத்தில் இந்துக்களுக்கு பல்வேறு உரிமைகள் மறுக்கப்படுகிறது. குறிப்பாக கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் பள்ளிகள், கல்லூரிகள் ஆரம்பித்தால் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. ஆனால் இந்துக்கள் இவ்வகையான பள்ளிகள் கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்றால் பல்வேறு இடையூறுகள் மற்றும் தடைகள் உள்ளது. மேலும் சட்டவிரோதமான சர்ச்சுகள் இயங்கி வருகிறது. அதனை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும். கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றால் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது. கிறிஸ்தவ சர்ச்சுகள் கிறிஸ்தவர்களிடமும் மசூதிகள் இஸ்லாமியர்களிடமும் உள்ளது. ஆனால் இந்து கோயில்கள் ஆட்சியாளர்களிடம் உள்ளது.
இவ்வகையான முரண்பாட்டை கலைந்து அனைத்து மதத்தையும் ஒன்றாக பாவிக்க வேண்டும். தற்பொழுது இந்துக்களிடையே எழுச்சி உருவாகி உள்ளது. அதனால் தான் முதலமைச்சர் இது ஆன்மீக ஆட்சி எனக் கூறி இந்துக்களை ஏமாற்ற பார்க்கிறார். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பல கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என கூறுவது இந்துக்களை ஏமாற்றும் செயலாகும்.
ஆக்கிரமிப்பில் உள்ள இந்து கோயில் நிலங்கள் குறித்து நாங்கள் பட்டியல் தருகிறோம். அதனை தமிழக அரசு மீட்டு தர வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிதம்பரம் கோவில் நீதிமன்ற தீர்ப்பின்படி தீட்சிதர்கள் பராமரிக்கலாம் என கூறியுள்ளது. ஆனால் தமிழக அரசு அத்துமீறி கோயிலை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது. நீதிமன்ற தீர்ப்பை அரசு மதிக்க வேண்டும்.
கோவில் நிலங்களை தேவைப்பட்டால் விற்கலாம் என இந்து சமய அறநிலைத்துறை கூறியுள்ளது. ஆனால் மன்னர்களும் ஆன்மீக பெரியவர்களும் கோவிலின் வளர்ச்சி மற்றும் கோவிலில் பணியாற்றக்கூடிய பணியாளர்களின் வாழ்வாதாரத்திற்காகவே கோவிலுக்கென்று நிலங்களை தானமாக வழங்கி உள்ளனர். அவ்வாறான நிலங்களை விற்கலாம் என தமிழக அரசு கூறியுள்ளதற்கு இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.