வருவாயை பெருக்க புதிய திட்டத்தில் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்
பெரியகருப்பூர் கிராமத்தில் மத்திய நாற்றங்கால் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்க தயாராக உள்ளன.
HIGHLIGHTS
தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனிற்காக பல்வேறு சீரிய திட்டங்களை வகுத்து அவற்றை செம்மையான முறையில் செயல்படுத்தியும் வருகிறது. அவற்றில் மேலும் ஒரு சிறப்பம்சமாக விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் கூடுதல் வருமானமும் வேலை வாய்ப்பும் கிடைக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்திடவும், விவசாய நிலங்களில் நிரந்தர பசுமை சூழ்நிலையினை உருவாக்குவதற்கும் 'தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்" என்ற புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் ரூ.11.14 கோடி மதிப்பில் 2021-22-ஆம் ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் வாயிலாக செயல்படுத்திட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் 1.918 இலட்சம் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விவசாய நிலங்களின் வரப்புகளிலும் மற்றும் குறைந்த செறிவில் விவசாய நிலங்களிலும் நடவு செய்யப்பட்டு மரம் சார்ந்த விவசாயம் ஊக்குவிக்கப்படும். இதற்கென ரூ.28.77 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தேக்கு மற்றும் செம்மரக்கன்றுகள், பெரியகருப்பூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய நாற்றங்கால் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தயாராக உள்ளன. மரக்கன்று ஒன்றின் விற்பனை விலை ரூ.15 ஆகும்.
விவசாயிகள் மரக்கன்றுகளைப் பெறுவதற்காக அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் பதிவு செய்து வேளாண்மைத்துறையின் பரிந்துரையின்படி, தேவையான மரக்கன்றுகளை பெரியகருப்பூர் கிராமத்தில் உள்ள மத்திய நாற்றங்கால் பண்ணையிலிருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மரக்கன்றுகள் விநியோகம் 'வரப்பு நடவு முறை" எனில் ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், விவசாய நிலங்களில் நடவு செய்ய ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளுக்கு மிகாமலும் வழங்கப்படும்.
மரக்கன்றுகளை பராமரித்திட விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக 2-ஆம் ஆண்டு முதல் 4-ஆம் ஆண்டு வரை உயிருடன் உள்ள மரக்கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7/- வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.21/- வழங்கப்படும். மரக்கன்றுகள் அனைத்தும் மழைநீரைப் பயன்படுத்தி டிசம்பர் மாதத்திற்குள் நடவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நடப்பட்ட மரக்கன்றுகள் வருவாய்த்துறையின் அடங்கல் பதிவேட்டில் பதியப்படும்.
இத்திட்டத்தில் விருப்பமுள்ள அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெறலாம். சிறுகுறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். உழவன் செயலி வாயிலாக தேவையான மரக்கன்றுகளை விவசாயிகள் பதிவு செய்து பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் பாதிப்படையாமல் கூடுதலாக ஊடுபயிராக மரங்களை வளர்த்து பலனடைவது தொடர்பாக அனைத்து விவசாயிகளுக்கும், அலுவலர்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும்.
மேலும், இத்திட்டத்தின்கீழ் பயனாளிகள் தேர்வு, மரக்கன்றுகள் விநியோகம் மற்றும் நடவுப்பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்படுவதை அரசு இணையதள செயலி வாயிலாக கண்காணிக்கப்படும். இத்திட்டத்தினால் வருங்காலங்களில் விவசாயிகளுக்கு ஒரு நிரந்தர வைப்புத் தொகை கிடைப்பதுடன், விவசாய நிலங்களின் மண் வளமும் அதிகரிப்பதோடல்லாமல் இம்மாவட்டத்தில் பசுமைப் பரப்பும், சுற்றுப்புறச் சூழலும் மேம்படுத்தப்படும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.