கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
காவேரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை ஏற்கனவே எட்டியுள்ளதைத்தொடர்ந்து, அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் சுமார் 140000 கன அடி அளவிற்கு திறந்துவிடப்பட்டு, தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலை உள்ளது.
இதன்காரணமாக, கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. எனவே, அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் எனவும் கரையோர கிராமங்களில் உள்ள வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
மேலும், பாதுகாப்பற்ற கரையோர பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்கள் 'செல்பி" எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆறு மற்றும் கால்வாய்களில் அதிகளவு நீர் வந்துகொண்டிருப்பதால் அந்தப் பகுதிகளுக்கு தங்கள் குழந்தைகள் விளையாட செல்லவிடாமல் பெற்றோர்கள்; பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
விவசாயிகள் தங்களின் கால்நடைகளை ஆற்றின் நடுவே அமைந்துள்ள திட்டுகளில் மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும் நீர்நிலைகள் வழியாக அழைத்துச்செல்வதை தவிர்க்கவும் வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.