மின்கம்பங்களில் கேபிள் ஒயர்களை அகற்ற அரியலூர் கலெக்டர் உத்தரவு
மின்கம்பங்கள் மற்றும் மின்பாதைகளில் இடையூறாக கேபிள் ஒயர்கள் மற்றும் விளம்பர பதாகைகளை அகற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஊர்களிலும் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்பாதைகளில் இடையூறாக கேபிள் ஒயர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் மின்வாரிய பணியாளர்கள் மின்தடை பராமரிப்பு பணி மேற்கொள்ளும்போது, மின்கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கேபிள் ஒயர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் காலில் சிக்கி விபத்து ஏற்படுகிறது.
விபத்தினை தவிர்க்கும் பொருட்டு மின்பாதைகள் மற்றும் மின்கம்பங்களில் உள்ள கேபிள் ஒயர்கள் மற்றும் விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இறுதி ஊர்வலங்களில் வீசப்படும் மாலைகளின் அதிர்வினால் மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டு மின்கம்பிகள் அறுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.
அடிக்கடி மின்தடை ஏற்படுவதோடு மின்மாற்றிகளில் பழுது ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் இறுதி ஊர்வலங்களில் மாலைகளை மின்கம்பிகள் மீது வீசாமல் கவனமுடன் செயல்பட வேண்டும் என, கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.